பெங்களூரு மெட்ரோவில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயி பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் அனுமதி மறுத்துள்ளார்.
பயணச் சீட்டு எடுத்தும் விவசாயியை பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத பாதுகாப்பு மேற்பார்வையாளரை சக பயணிகள் கண்டித்ததால், அந்த விவசாயிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளை அங்கிருந்த பயணி ஒருவர் விடியோ எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று பலர் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், விவசாயியை பயணம் மேற்கொள்ள இடையூறு செய்த பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணிநீக்கம் செய்துள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,
“ராஜாஜிநகர் மெட்ரோ விவகாரம் விசாரிக்கப்பட்டு, சமந்தப்பட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணிக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.