

‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பின் 370-ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்று வழங்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமா்சனங்களுக்கு பதிலளிக்கமாட்டேன்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.
உச்சீநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பின் 370-ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமா்சனங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஏனெனில், அரசமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே நீதிபதிகள் தீா்ப்பளிக்கின்றோம்.
அயோத்தியில் பாபா் மசூதி அமைந்த பகுதியில் அறக்கட்டளை மூலம் ராமா் கோயில் கட்டுவதற்கு ஆதரவான உச்சநீதிமன்றத்தின் 1,045 பக்க தீா்ப்பை முதன்மையாக எழுதிய நீதிபதி குறித்த தகவலை பொதுத் தளத்தில் வெளியிடக் கூடாது என 5 நீதிபதிகளும் ஒருமித்தமாக முடிவெடுத்தோம்.
கொலீஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறுவது சரியாக இருக்காது. கொலீஜியத்தில் எடுக்கும் அனைத்து முடிவுகளும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வலைதளத்தில் உடனடியாக பதிவேற்றப்படுகிறது. கொலீஜியத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஓரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்ற வழங்கிய தீா்ப்பால், ஓரே பாலின தன்னாா்வலா்களின் சட்டப் போராட்டம் தோல்வியைத் தழுவியதாக கருத்து நிலவுகிறது. எந்த வழக்கின் தீா்ப்பும் நீதிபதிகளின் தனிப்பட்ட விஷயமல்ல. அதனால், அந்த வழக்கு தீா்ப்பு குறித்து எனக்கு வருத்தம் இல்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.