மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து 19 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவருக்கு அருகில் ஒரு தாளில் குறிப்பு ஒன்று கிடந்துள்ளது. அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளான காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டி.என்.நகர் காவல்நிலைய அதிகாரி கூறினார்.
இதையும் படிக்க | ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை: ராகுல், பிரியங்காவுக்கு அழைப்பில்லை?
உயிரிழந்த மாணவி விதி பிரமோத் கடந்த சில வருடங்களாக அந்தேரி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள தாணே நகரில் வசித்து வந்துள்ளனர்.
அப்பெண்ணின் சடலத்தை முதலில் பார்த்த வாட்ச்மேன் குடியிருப்பு நிர்வாகிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அம்மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இவரது மரணத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விபத்து மரணம் என்று வழக்கு பதிந்த காவல்துறையினர் முழுமையான விசாரணைக்குப் பிறகே இவரது மரணத்திற்கான உறுதியான காரணம் தெரியவரும் என்று கூறினர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].