குனோ தேசியப் பூங்காவில் மூன்று சிவிங்கிப் புலிக் குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் வசித்துவரும் நமீபிய சிவிங்கிப் புலி ஆஷாவுக்கு மூன்று குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்த புகைப்படம் மற்றும் விடியோவினை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “குனோ தேசியப் பூங்கா மூன்று புதிய உறுப்பினர்களை வரவேற்கிறது. இந்த மூன்று குட்டிகளும் நமீபிய சிவிங்கிப் புலியான ஆஷாவுக்கு பிறந்துள்ளன.
சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட சிவிங்கிப் புலி திட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி இது.
இந்தத் திட்டத்தில் பங்காற்றிய அனைத்து நிபுணர்கள், குனோ தேசியப் பூங்கா நிர்வாகிகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மத்திய பாஜக அரசின் மொத்த கடன் 165 லட்சம் கோடி: கே.எஸ். அழகிரி