வரமாக மாறிய சில்க்யாரா சுரங்க விபத்து: தொழிலாளி இதயத்தில் ஓட்டை

சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய 24 வயது தொழிலாளிக்கு முற்றிலும் உண்மையாக மாறியிருக்கிறது.
வரமாக மாறிய சில்க்யாரா சுரங்க விபத்து: தொழிலாளி இதயத்தில் ஓட்டை


டேஹ்ராடூன்: வாழ்வில் எது நடந்தாலும் நல்லதுக்கே என்று பெரியவர்கள் வாய்மொழியாகச் சொல்வதுண்டு. அது சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 24 வயது தொழிலாளிக்கு முற்றிலும் உண்மையாக மாறியிருக்கிறது.

சில்க்யாரா சுரங்கத்தில் பணியாற்ற வந்த போது, இங்கு ஒரு விபத்து நேரிடும் என்று வேண்டுமானால் அவர் பயந்திருக்கலாம். ஆனால், அந்த விபத்து மீட்புப் பணிகளில் சிக்கலை ஏற்படுத்த அது உலகளவில் கவனம் பெற்று அதிலிருந்து மீள்வதன் மூலம், தனது இன்னுயிர் காப்பாற்றப்படும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

சம்பாவத் பகுதியைச் சேர்ந்த புஷ்கர் சிங் (24), 17 நாள்கள் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் ஒருவர். இவருக்கு தனது இதயத்தில் ஓட்டை ஒன்று இருந்ததே தெரியாது. அவர் நவம்பர் 29ஆம் தேதி சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டு, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டபோதுதான், இவரது இதயத்தில் ஓட்டை இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது, மருத்துவ பரிசோதனையில் அவரது இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமலேயே, அவர் சம்பாவத்திலிருந்து உத்தரகாசிக்கு வேலை தேடி வந்துள்ளார்.

அவரது இதயத்தில் உள்ள குறைபாடு கண்டறியப்பட்ட பிறகு, எய்ம்ஸ் மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இந்த அறுவைசிகிச்சை ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது, புஷ்கர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். வெள்ளிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்று மருத்துவர் குமார்  மற்றும் இருதயத் துறையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அன்ஷுமன் தர்பாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளிக்கு இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், புஷ்கரின் உடல்நிலை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஒருங்கிணைப்பை உறுதி செய்துகொண்டு, "புஷ்கரின் தைரியம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் கடின உழைப்பும் இந்த மிகவும் சிக்கலான இதய அறுவை சிகிச்சையின் முழுமையான வெற்றிக்கு வழிவகுத்தது" என்றும் டாக்டர் குமார் கூறினார்.

உத்தரகண்டுக்கு வேலை தேடிச் சென்று, அங்கு சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கி, மீட்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுள்ளார்.  இதன் மூலம், அவரது வாழ்வில் நிகழவிருந்த மிக மோசமான சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எந்த சவாலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு மாறியிருக்கிறார் என்று மருத்துவமனை செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com