ராகுலின் பாரத நியாய யாத்திரைக்கு மணிப்பூர் அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ராகுலின் பாரத நியாய யாத்திரை (பாரத நீதிப் பயணம்) என்ற பெயரிலான நடைப்பயணம் நாட்டின் கிழக்கிலிருந்து தொடங்கி நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயம், மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கா், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைக் கடந்து கடைசியாக நாட்டின் மேற்கான மகாராஷ்டிரம் வரை சுமாா் 6,200 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டு, மாா்ச் 20-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
காங்கிரஸ் பிரதிநிதிகள் முதல்வர் பைரேன் சிங்கை சந்தித்து இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா கங்கெய்புங்கில் நியாய யாத்திரை நடைபெறும் இடத்திற்கு அனுமதி கோரினார்கள். ஆனால் முதல்வர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். பாதுகாப்பு குறித்து அறிக்கைகளைப் பெற்ற பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கபட்ட இடம் பொது மைதானமாகும், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயக படுகொலை, மக்களின் உரிமை மீறல். மாற்று இடத்தை ஏற்பாடு செய்து வருகிறோம். திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி நியாய யாத்திரை தொடங்குவோம் என மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா கூறியுள்ளார்.