அதிக குளிர் காலநிலை நிலவி வருவதன் காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜன.18 முதல் காலை 10 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் கடந்த ஒரு மாதமாக அதிகப்படியான குளிர் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை காலை 10 மணிக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என கௌதம் புத்த நகர் கல்வி அதிகாரி ராகுல் பன்வார் தெரிவித்தார். இந்த உத்தரவை அமல்படுத்தப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிக்க: பிரதமரின் கேரள விஜயப் பின்னணி!
முன்னதாக, 9 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளி நேரம் கடந்த வாரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. தற்போது குளிர் காலநிலை காரணமாக ஜனவரி 18 நர்சரி முதல் 8-ம் வகுப்புகள் வரை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள அரசுப் பள்ளிகள் பொதுவாக குளிர்காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கால அட்டவணையைப் பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.