அயோத்தி ராமர் மூலவர் பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிகள் நடப்பதாக சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மத அடிப்படையில் அரசியலில், கட்சிகள் ஈடுபடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் ஜோதி பாசுவின் 15-வது நினைவு நாள் கூட்டத்தில் பங்கெடுத்த சீதாராம் யெச்சுரி செய்தியாளர்களிடம் பேசும்போது, மத நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு கட்சியும் உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன.22-ல் நடைபெறவுள்ளது. அதே நாளில் திரிணமூல் காங்கிரஸ் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட தலைவர்களுடன் நட்பு பேரணியை ஒருங்கிணைக்கவுள்ளது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு யெச்சூரி, “ஒவ்வொரு கட்சிக்கும் சமூக நல்லிணக்கத்தைப் பேண அவர்களின் சுய பிராசாரத்தை மேற்கொள்ள உரிமை உண்டு.ஆனால் அந்த முயற்சியில் வகுப்புவாதமோ பிரிவினைவாதமோ இடம்பெறக் கூடாது” எனத் தெரிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பேசுகையில் மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளைத் திணற செய்ய பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணமூல் கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது எனக் கூறினார்.
மூலவர் பிரதிஷ்டை விழா குறித்து, “பாஜக உண்மையான சுதந்திரம் நிறைவேறிய கனவு என இந்த விழாவைக் குறிப்பிடுகின்றனர். இது சுதந்திர போராட்டம், வீரர்களின் தியாகம் ஆகியவற்றை மறுக்கும்வகையிலான கருத்து. தேசத்தின் தலைவர்களையும் அவர்களின் கூட்டுமுடிவான பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகத்துக்கும் எதிரான முடிவு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.