கமல்நாத் குறித்து விமர்சனம் செய்ததற்காக கட்சியின் செய்தி தொடர்பாளர் அலோக் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது காங்கிரஸ் கட்சி.
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததற்காக நேரில் விளக்கமளிக்குமாறு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அலோக் சர்மாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க | பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு ஒத்திவைப்பு
நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் குறித்து அடிப்படையற்ற, கண்டிக்கக்கூடிய அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததற்காக செய்தித் தொடர்பாளர் அலோக் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துகொண்டு நீங்கள் இவ்வாறு பேசியது கட்சி மற்றும் மூத்த தலைவர்களை இழிவுபடுத்தும் முயற்சியாகும். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ள நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த நோட்டீஸ் உங்களுக்கு கிடைத்து இரண்டு நாட்களுக்குள் நீங்கள் பேசியது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை விளக்கம் தராவிட்டாலோ அல்லது விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் கமல்நாத் பாஜகவுடன் மறைமுக கூட்டு வைத்ததாகவும், அதனைக் கண்டறிய மூத்த தலைவர்கள் தவறி விட்டதாகவும் அலோக் சர்மா கூறியிருந்தார்.
இதையும் படிக்க | ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார் அசோக் தன்வார்!
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.