குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சி.ஜே.சௌதா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதையடுத்து குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது.
குஜராத்தின் மேசனா மாவட்டத்தில் உள்ள விஜப்பூர் தொகுதியில் இருந்து 2022 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சௌதா.
மூன்று முறை எம்.எல்.ஏ.வான சி.ஜே.சௌதா தனது ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் சங்கர் சௌதரியிடம் வெள்ளிக்கிழமை காலையில் சமர்ப்பித்தார்.
இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு காந்திநகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு காந்திநகர் வடக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சௌதா காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகப் பணியாற்றினார்.
2022 ஆம் ஆண்டு விஜப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர் ஆவார்.
முன்னதாக, சட்டப்பேரவை உறுப்பினர் சிராக் படேல் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது இவரும் பதவி விலகியுள்ளார்.
இதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது.