பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த பிரச்னைகளை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கையிலெடுக்குமென ஹிமாசல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது பொய்யான வாக்குறுதி என நிரூபணமாகியுள்ளது. நாட்டில் 4 கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டில் வேலைவாய்ப்பின்றி இருந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமானோர் தற்போது நாட்டில் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். நாட்டில் பணவீக்கமும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல், எல்பிஜி, கோதுமை, பருப்பு வகைகள், அரிசி, சமையல் எண்ணெய், பால் ஆகியன சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது மக்கள் மீதான நிதிச் சுமையை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் வீடுகளில் பெண்களால் சேமிக்கப்படும் தொகையில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த பிரச்னைகளை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கையிலெடுக்கும் என்றார்.