மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினமான ஜன.26ம் தேதி மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மனோஜ் ஜராங்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கோரி, மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டம் அந்தா்வாலி சாரதி கிராமத்தில் மனோஜ் ஜரங்கே என்ற மராத்தா சமூக தலைவா் கடந்த நவம்பர் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க | இந்திய சுதந்திரத்துக்கு காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை!
இந்நிலையில் மீண்டும் அக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 26-ம் தேதி முதல் மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
மனோஜ் ஜரங்கே ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி ஜன.20ம் தேதி நடைப்பயணத்தை தொடங்கினார்.
அவர் செவ்வாய்க்கிழமை புனே மாவட்டத்தை அடைந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “இரண்டு முதல் இரண்டரை கோடி மராத்தா சமூக மக்கள் மும்பைக்கு வருவார்கள். எங்களின் பலத்தை ஜன.26ம் தேதி காட்ட உள்ளோம்.
நான் எனது உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ளேன். மராத்தா சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் நான் திரும்பிச் செல்லமாட்டேன்.” என்று தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தா சமூக மக்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குன்பி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.