பிகாரில் ஆளும் அரசில் விரிசல்.. அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு?

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிகாரில் ஆளும் மாநில அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, பிகாரில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறுத்திவைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்திருப்பதாகவும், லாலு பிரசாத்துடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியே வர நிதீஷ் குமார் முடிவெடுத்திருப்பதன் விளைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் உறவை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கைகோர்த்து, பிகாரில் விரைவில் புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என்று ஒரு சில நாள்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில்தான், ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டாம் என்றும் நிறுத்தி வைக்குமாறும் அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு தின விழாவை முன்னிட்டு பிகார் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில், முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்க, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்துவிட்டார். இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர்களுடன் நட்பு பாராட்டிய நிதீஷ் குமார், விரைவில் இந்த நட்பை அரசியலிலும் புகுத்துவார் என்றே கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com