2025-ல் பிகாரில் பாஜக ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2025-ல் பிகாரில் பாஜக ஆட்சியமைக்கும். 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2025 பேரவைத் தேர்தலில் பிகார் மக்கள் பாஜகவுக்காக வாக்களிப்பார்கள். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் கவனித்து வருகிறேன். பிகாரில் நாங்கள்தான் பிரதான கட்சி, அதனால் நடக்கும் செயல்பாடுகளை பாஜக தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆனால் என்ன நடந்தாலும் அதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. அண்மையில் பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டத்தில் நிதீஷ் குமாரை விட ராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் முன்னுரிமை அளித்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் தொடங்கியது. பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பியே நிதீஷ்குமார் பாஜகவில் இருந்து விலகியதாகவும், ஆனால் அவருக்கு லாலு யாதவின் ஆதரவு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பிகார் மாநிலத்தில் மஹாகத்பந்தன் கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு, ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பிரியப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறும் ஐக்கிய ஜனதா தளம் விரைவில் பாஜகவுடன் இணைந்து புதிய அரசு பொறுப்பேற்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.