திருவனந்தபுரம் : குடியரசு தின நிகழ்ச்சியில் மத்திய அரசை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த உயர்நீதிமன்ற அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 75வது குடியரசு தினம் நேற்று(ஜன.26) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரளத்தின் கொச்சியில் அமைந்துள்ள கேரள தலைமை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியின் போது, மத்திய அரசை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த உயர்நீதிமன்ற அதிகாரிகள் இருவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் தரப்பில் வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.