பிகாரில் நடந்து வரும் அரசியல் பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதீஷ்குமாரிடம் பேசி சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயன்றதாகவும், ஆனால், நிதீஷ்குமாருக்கு பேச நேரமில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதீஷ் குமாரிடம் பேசுவதற்கு முயற்சித்துள்ளார். ஒரு முறையல்ல, பல முறை. ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. பவதாரணியின் மறைவையொட்டி... புற்றுநோய்: வலியும் வாழ்வும்
இதற்கிடையே, பிகாரில், ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான உறவை துண்டித்துக் கொண்டு பாஜகவுடன் இணையவிருப்பதாக வரும் தகவல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அது குறித்து அவர் பேசுகையில், நான் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன், பேசுவதற்கு முயற்சி செய்தேன். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. நாளை டேஹ்ராடூன் சென்றுவிட்டு பிறகு தில்லி வருவேன். அப்போது முழுமையான தகவல்களுடன் வருகிறேன். அதுவரை இதுபோன்ற செய்திகள் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. நமக்கு எதுவும் தெரியவில்லை என்றார்.
மேலும், ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களின் மனதில் மாற்றம் இருக்காது, எங்களுடன் இருப்பார்கள் என்றும் கார்கே கூறியுள்ளார்.