ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறுகிய லாபங்களுக்காக மனம் மாறமாட்டார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு கூறினார்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, “நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
நான் நாளை (ஜன.28) டேராடூன் செல்கிறேன். அதன்பிறகு தில்லி செல்ல உள்ளேன். முதலில் அவர்களிடம் பேசி சரியான விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன். இல்லையெனில் குழப்பத்திற்கே வழிவகுக்கும்.
அனைவரையும் ஒன்றிணைக்கவே முயற்சித்து வருகிறோம், என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் பேசியுள்ளேன்.
நாம் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவிற்கு எதிராக சண்டையிட்டு நிச்சயம் வெல்லலாம். நாட்டின் ஜனநாயகத்தை காக்க நினைப்பவர்கள் மனம் மாறாமல் இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணி: உத்தர பிரதேசத்தில் தொகுதி உடன்பாடு
இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படும் வேளையில், அதற்கு மாறாக உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு சுமுகமாக நிறைவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.