கோட்டா நகரில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 18 வயது மாணவி நிஹரிகா, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | தேசியக் கொடிக்குப் பதில் அனுமன் கொடி: கெரகோடு கிராமத்தில் 144 தடை!
அந்த கடிதத்தில், “என்னால் ஜேஇஇ தேர்வு எழுத முடியாது. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். நான் தோல்வியடைந்தவள். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று எழுதப்பட்டுள்ளது.
இது கடந்த ஒரு வாரத்திற்குள் கோட்டா நகரில் நடந்துள்ள சந்தேகத்திற்கிடமான இரண்டாவது தற்கொலைச் சம்பவமாகும்.
பள்ளித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் மதிப்பெண்களில் போட்டி வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய நாளில், இந்த தற்கொலை நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் இங்கு வந்து நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இதையும் படிக்க | தெருநாயால் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலி
இந்நிலையில் சமீபமாக இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பரில் சில வாரங்களுக்கு அங்கு பயிற்சித் தேர்வுகள்கூட நடத்தக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].