தெலங்கானா மாநிலத்தில் மிர்யால்குடா அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மிர்யால்குடா அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்து குறித்து மிர்யால்குடா காவல் துணைக் கண்காணிப்பாளர் வேங்கடகிரி கூறியதாவது, “நேற்று (ஜன.28) இரவு சுமார் 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இரு பெண்கள், அவர்களின் கணவர்கள் மற்றும் குழந்தைகள் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் பயணித்துள்ளனர். அதில் 1 வயது ஆண் குழந்தை மற்றும் 5 வயது பெண் குழந்தையும் அடங்கும்.
நந்திபாட் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். வரும் வழியில் திடீரென தெருநாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது. நாயின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக காரை உடனடியாக திருப்ப முயற்சித்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த லாரி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | தேசியக் கொடிக்குப் பதில் அனுமன் கொடி: கெரகோடு கிராமத்தில் 144 தடை!