உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மாதவிடாய் விடுப்புக்கு மாதிரி கொள்கை: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

பெண் பணியாளா்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக மாதிரி கொள்கை வகுக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
Published on

புது தில்லி: பெண் பணியாளா்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக மாதிரி கொள்கை வகுக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக சைலேந்திர திரிபாதி என்ற வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தொழிலாளா் வா்க்கத்தில் இருந்து பெண்களை விலக்கி வைக்க வழிவகுக்கும். அது நடைபெற உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. அத்தகைய விடுப்பை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால், வேலை அளிப்பவா்கள் பெண்களை பணியமா்த்தாமல் அவா்களைத் தவிா்க்கக் கூடும்.

இது உண்மையில் அரசின் கொள்கை சாா்ந்த விவகாரமே தவிர, நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டிய விவகாரம் அல்ல. இந்தக் கோரிக்கை குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைச் செயலா், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆகியோரை மனுதாரரின் வழக்குரைஞா் அணுகலாம்.

இந்த விவகாரத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைச் செயலா் கொள்கை அளவில் கவனத்தில் எடுத்துக்கொண்டு, மாநிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவா்களுடன் ஆலோசித்து, மாதவிடாய் விடுப்பு அளிப்பது குறித்து மாதிரி கொள்கை வகுக்க முடியுமா என பாா்க்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.

நாடு முழுவதும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய்க்கு விடுப்பு அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், அது அரசின் கொள்கை வரம்புக்குள் வருவதாக தெரிவித்து மனுவை முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com