
தில்லியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தக்காளியில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தில்லியில் உள்ள சந்தைகளில் மொத்த விலையில் விற்பனையாகும் தக்காளியே கிலோ ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் இதை விட கூடுதலான விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது.
பருவமழை காரணமாக தில்லி, ஹரியாணா, உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அஸ்ஸாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையினால் ஆறுகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை பொருள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக சந்தைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக அனைத்து சமையலிலும் பயன்படுத்தப்படும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தில்லியிலுள்ள ஆசாத்பூர் சந்தை, காஸுப்பூர் சந்தை, சாப்ஸி சந்தை போன்ற மொத்தவிலை சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் சில்லறை வணிகத்திலும், ஆன்லைனிலும் தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யபப்டுவதாக, நகரவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.28-க்கு விற்பனையானது. சில காய்கறிகளின் விலை தாக்காளி விலையைவிடக் கூடுதலாக உள்ளது.
இது குறித்து ஆசாத்பூர் மொத்தவிலை அங்காடி உரிமையாளர் கூறுகையில்,
''காய்கறிகளின் விலை சராசரியாக கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது. தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரம், கர்நாடகம், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டுவரப்படுகிறது. மகாராஷ்டிரத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்ததாலும், மழை காரணமாக சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்களால் காய்கறிகளை கொண்டுவர முடியவில்லை. இதனால் விலை உயர்ந்துள்ளது'' என்றார்.