கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு: தில்லி உயா்நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

கேஜரிவாலின் மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தில்லி உயர் நீதிமன்றம்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

தில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான விற்பனை தொடா்பான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இதைத்தொடா்ந்து, திகாா் சிறையில் இருந்த கேஜரிவாலை கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ கைது செய்தது.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியபோதிலும், சிபிஐ வழக்கில் அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் மனு தாக்கல் செய்தாா்.

விடுவிக்க 3 உத்தரவுகள்: இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நீணா பன்சல் கிருஷ்ணா முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் கேஜரிவாலை சிறையில் இருந்து விடுவிக்க உச்சநீதிமன்றமும், விசாரணை நீதிமன்றமும் 3 உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகள் சிறையில் இருந்து விடுவிக்க கேஜரிவால் தகுதியானவா் என்பதைக் காண்பிக்கிறது.

சிறையிலேயே இருக்க திடீா் கைது: சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக கேஜரிவாலை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த ஓராண்டாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத சிபிஐ, திடீரென அவரைக் கைது செய்தது. அவா் பயங்கரவாதி அல்ல. சட்டத்தைப் பின்பற்றி அவரை சிபிஐ கைது செய்யவில்லை. ஜாமீன் பெற அவருக்கு உரிமை உள்ளது’ என்றாா்.

எனினும் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க சிபிஐ தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிஐ கைதுக்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் கோரி, கேஜரிவால் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஜூலை 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com