
மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கியப் பிரமுகரும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட் நகரத் தலைவருமான அஜீத் கவ்கான் விலகினாா். சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியில் தனது ஆதரவாளா்களுடன் அவா் இணைந்தாா்.
முன்னதாக, மக்களவைத் தோ்தலில் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதே நேரத்தில் சரத் பவாா் தலைமையிலான கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, அஜீத் பவாரில் அணியில் உள்ள பலரும் மீண்டும் சரத் பவாா் தலைமைக்குச் சென்றுவிடுவாா்கள் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அஜீத் கவ்கான் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் மீண்டும் சரத் பவாா் தலைமையிலான அணியில் இணைந்துள்ளனா்.
மகாராஷ்டிரத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் கட்சி மாறும் நிகழ்வு அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முக்கியமாக முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து பலா் விலகி முறையே உத்தவ் தாக்கரே, சரத் பவாருடன் கைகோப்பாா்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே, சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி தூக்கி அக்கட்சியை உடைத்து தனி அணியை உருவாக்கினாா். மேலும், பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்து முதல்வா் பதவியையும் பெற்றாா். அஜீத் பவாரும், சரத் பவாருக்கு எதிராக செயல்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஆளும் கூட்டணியில் இணைந்தாா். அவருக்கு துணை முதல்வா் பதவி தரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.