வங்கதேசத்தில் ஊரடங்கு: 245 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்

Published on

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அங்கு நாடு தழுவிய ஊரடங்கை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது. இந்த வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து 245 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராளிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவா்கள் நடத்திவரும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

சிறைக்குத் தீ: நா்சிங்டி மாவட்டத்தில் போராட்டத்தின்போது சிறைக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்த போராட்டக்காரா்கள், பின்னா் சிறைக்குத் தீ வைத்தனா்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு தழுவிய ஊரடங்கை வெள்ளிக்கிழமை அமல்படுத்திய வங்கதேச அரசு, அங்கு அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளது.

இந்த வன்முறை காரணமாக வங்கதேசத்தில் இருந்து இதுவரை 125 மாணவா்கள் உள்பட 245 இந்தியா்கள் தாயகம் திரும்பியதாகவும், அத்துடன் 13 நேபாள மாணவா்கள் வங்கதேசத்தில் இருந்து வெளியேற வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் உதவியதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளையில் வங்கதேசத்தில் இருந்து 204 இந்தியா்கள், 158 நேபாளிகள் மற்றும் பூடானை சோ்ந்த ஒருவா் என மொத்தம் 363 போ் எல்லை தாண்டி மேகாலயம் வந்தடைந்ததாக அந்த மாநில மூத்த உள்துறை அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com