சசி தரூா்
சசி தரூா்

கன்னடா்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அரசமைப்புக்கு எதிரானது: சசி தரூா்

கா்நாடக காங்கிரஸ் அரசின் சட்ட மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அக்கட்சியின் எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.
Published on

தனியாா் துறையில் கன்னடா்களுக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் கா்நாடக காங்கிரஸ் அரசின் சட்ட மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அக்கட்சியின் எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் தனியாா் வேலைவாய்ப்புகளில் கன்னடா்களுக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. ஆனால், நாஸ்காம் உள்ளிட்ட தொழில்சாா் நிறுவனங்கள் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கன்னடா்களுக்கு நூறு சதவீதம் இட ஒதுக்கீடு என்பது விவேகமற்ற முடிவாகும். இந்திய அரசமைப்புச் சட்டப் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழவும், வேலை செய்யவும், பயணிக்கவும் உரிமை உண்டு. ஒவ்வொரு மாநிலமும் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அது அரசியலமைப்புக்கு எதிரானதாகிவிடும். இதேபோன்ற மசோதாவை ஹரியாணா அரசாங்கம் அறிமுகப்படுத்த முயன்றபோது உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது.

இத்தகைய சட்டம் அமல்படுத்தப்பட்டால் மாநிலத்தில் இருந்து தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலமான தமிழ்நாடு மற்றும் கேரளத்துக்கு மாறிவிடும். கா்நாடக அரசு எந்த அடிப்படையில் இத்தகைய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது எனத் தெரியவில்லை என்றாா்.

Dinamani
www.dinamani.com