

கோண்டா: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில சண்டீகர் - திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானபோது, பயங்கர வெடிச் சப்தம் கேட்டதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், எந்த வெடிகுண்டும் வெடித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
சண்டீகர் - திப்ரூகர் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பெரிய அளவில் உயிர்ச்சேதம் நேரிடவில்லை. இந்த ரயில் விபத்தில் 3 பயணிகள் பலியாகினர். 20 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து பேசிய ரயில் ஓட்டுநர், திடீரென தனக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், அதனால் தான் அவசரகால பிரேக்கைப் போட்டு ரயிலை நிறுத்த முயற்சித்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதுபோலவே, விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணி ஒருவரும், ரயில் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, பயங்கர வெடிச் சப்தம் கேட்டதாகவும், அதன்பிறகே வண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் கூறியிருக்கிறார்.
விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழு விரைந்து வந்து மீட்புப் பணிகள் துரித வேகத்தில் மேற்கொண்டனர். 40 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், 15 ஆம்புலன்ஸ்களும் சம்பவப் பகுதிக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த ரயில் விபத்து, வியாழக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு நேரிட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
மோடிகஞ்ச் - ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டதாகவும், இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.