மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல்... ரூ.5 கோடி அபராதம் வசூலித்த இந்திய ரயில்வே!

ரயில்வே வளாகத்தில் எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டுதல் காரணங்களுக்காக இந்திய ரயில்வே ரூ.5 கோடி அபராதம் வசூலித்துள்ளது.

News image
இந்திய ரயில்வே
Updated On :27 ஜூலை 2024, 2:17 pm

DIN

ரயில்வே வளாகத்தில் எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டுதல் காரணங்களுக்காக தனிநபர்களிடமிருந்து அபராதமாக ரூ.5.13 கோடியை இந்திய ரயில்வே வசூல் செய்துள்ளது.

மாநிலங்களைவையில் நேற்று (ஜூலை 26) பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டுதல் காரணங்களுக்காக தனிநபர்களிடமிருந்து கடந்த இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.5.13 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

”நாடு முழுவதும் ரயில்வே வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை மீறியதாக கடந்த இரு நிதியாண்டுகளில் பிடிபட்ட 3,30,132 பேரிடம் இருந்து இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. சுத்தம் செய்வதில் ரயில்வே நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டாலும், சுகாதாரத்தைத் தொடர்ந்து பேணுவது சவாலாக உள்ளது. தூய்மை என்பது தொடர்ச்சியான செயல்பாடு. ரயில்வே வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் தெரிவித்தார்.

சுத்தமின்மை தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் அபராதத் தொகையை உயர்த்துவது குறித்து தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ரயில்வே நிர்வாகம் தற்போதுள்ள விதிகளை ஒழுங்குபடுத்தி, தூய்மை குறித்தப் பிரசாரங்களைத் தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்திய ரயில்வேயின் பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) மொத்தமுள்ள 63,051 பேரில் 5,900 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இது மொத்தமுள்ள வீரர்களில் 9.36% ஆகும்.

மேலும் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், ஆர்பிஎஃப் வீரர்கள் பணியாற்றும் 750 ரயில் நிலையங்களில் பெரும்பாலும் பெண்களைப் பணியில் அமர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-24 நிதியாண்டில் முன்பதிவு செய்யபட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளில் 36% பெண்கள் பயணிப்பதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதனைத் தொடர்ந்து, பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்ட ‘மேரி சஹேலி’ திட்டத்தில், 245 குழுக்கள் மூலம் 700 பெண் பாதுகாப்புப் படை வீரர்கள் தினசரி பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.