
திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் லிவ்-இன்-டுகெதர் முறையில் இணைந்து வாழும் முறையை தடை செய்ய ஹரியாணாவில் நடைபெற்ற 300 கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் இன்று(ஜூலை 28) ஹரியாணா மட்டுமன்றி, உத்தர பிரதேசம், குஜராத், தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிருந்து சுமார் 300 பஞ்சாயத்து ஒன்று திரண்டு முக்கிய விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், கூட்டத்துக்கு தலைமையேற்ற ரகுபிர் நைன் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாங்கள் யாரும் காதல் திருமணத்துக்கு எதிராக இல்லை. மாறாக, அதில் பெற்றோர்களின் சம்மதம் மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறோம்.
ஒரே கோத்ரத்தை சார்ந்தவர்கள் (பாரம்பரியமாக ஒரே வம்சத்தை சார்ந்தவர்கள்) திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும். லிவ்-இன்-உறவு முறைகள், ஒரே பாலின திருமணங்கள் ஆகியவற்றுக்கும் கட்டாயம் தடை விதிக்க வேண்டும்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து விவாதிப்போம். எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து இவ்விவகாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்த உள்ளோம்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
லிவ்-இன்-உறவு முறைகளால் குடும்பங்கள் பிரிந்துவிடுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ள பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான சந்தோஷ் தாஹியா, சட்டம் இத்தகைய வாழ்வியல் முறைக்கு அனுமதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ”ஒரே வம்ச கோத்ரத்தில் திருமணம் செய்வதால் சமூக கட்டமைப்பு சிதைவதாகவும், இதன் காரணமாக, மரபணு சார் பிரச்னைகள் உள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரே கோத்ரத்தில் திருமணம் செய்வதை கட்டாயம் தடை செய்ய வலியுறுத்தியுள்ளார்.