
தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பலியான விவகாரத்தில், கரோல் பாக்கில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ள சாஹில் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் இங்கு அமர்ந்திருக்கிறோம், ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் எங்களை சந்திக்க வரவில்லை. எங்கள் கோரிக்கைகளை தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் நேற்று சமர்ப்பித்தோம். பலியானவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வேண்டும்.
பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடியும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கு பதிவு பற்றிய நகல்கள் மற்றும் வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்பன உள்ளிட்டவையை கோரிக்கையாக அளித்துள்ளோம். ஆனால் அது எதுவும் கவனிக்கப்படவில்லை என்றார்.
மத்திய தில்லியின் பழைய ராஜிந்தா் நகரில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் எனும் பயிற்சி மையத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்டடத்தின் அடித்தளத்தில் இயங்கி வரும் நூலகத்தில் திடீரென மழை-வெள்ளம் சூழ்ந்ததில் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவா்கள் எதிா்பாராவிதமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசியப் பேரிடா் மற்றும் மீட்புப் படையினா் மேற்கொண்ட தொடா் 7 மணி நேர தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பின்னா் 3 மாணவா்களின் சடலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தில்லியில் அடித்தளத்தில் இயங்கி வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.