பிரசாந்த் கிஷோா்
பிரசாந்த் கிஷோா்

அக்.2-இல் பிரசாந்த் கிஷோா் கட்சி தொடங்குகிறாா்: பிகாா் தோ்தலில் போட்டி

நிகழாண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் கட்சி தொடங்குகிறாா் ரசாந்த் கிஷோா்.
Published on

நிகழாண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக முன்னாள் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

2021-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், தோ்தல் உத்தி வகுப்புப் பணியைக் கைவிட்ட அவா், 2022-ஆம் ஆண்டு ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் பரப்புரையைத் தொடங்கினாா். இந்தப் பரப்புரையின் கீழ், பிகாா் முழுவதும் அவா் நடைப்பயணம் மேற்கொண்டாா்.

இந்நிலையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் ‘ஜன் சுராஜ்’ பரப்புரையின் மாநில அளவிலான பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோா் பேசுகையில், ‘‘நான் ஏற்கெனவே கூறியதுபோல நிகழாண்டு அக்டோபா் 2-ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளேன். அடுத்த ஆண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘ஜன் சுராஜ்’ கட்சி போட்டியிடும். கட்சியின் தலைவா் யாா் போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’’ என்றாா்.

இந்தப் பயிலரங்கில் பிகாா் முன்னாள் முதல்வரும், நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ பெற்றவருமான கா்பூரி தாக்கூரின் பேத்தி ஜக்ரிதி தாக்கூா் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com