
கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே இன்று(ஜூலை 30) அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளவர்களை மீட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணியளவில் அந்த ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளன.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8086010833 / 9656938689 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு உதவிபெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மானந்தாவடி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு தேவைப்படும் சிகிச்சையளிக்க அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக செவிலியர்களும் மருத்துவர்களும் அங்கு வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.