
இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லி திரும்பினார்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் 50வது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இந்தியாவுக்கு இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்த நிலையில் பிரதமர் மோடி இத்தாலி சென்றார்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறும் மாநாட்டு அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்றார். அங்கு பேப் பிரான்சிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தில்லி திரும்பியுள்ளார். பயணம் தொடர்பாக பிரதமர் எக்ஸ் தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
இத்தாலி மக்கள் மற்றும் அரசின் அன்பான விரும்தோம்பலுக்கு நன்றி. அலிபுலியாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உலகத் தலைவர்களுடன் உரையாடி, பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். ஒன்றாக இணைந்து உலகளாவிய சமூகத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த உலகத்தை உருவாக்குவதையும் நோக்கமாக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஏழு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.