பிரதமா் மோடி.
பிரதமா் மோடி.

பிரதமா் மோடி இன்று வாரணாசி பயணம்: பதவியேற்ற பின் முதல் முறை

மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், பிரதமா் மோடி முதல் முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) செல்லவிருக்கிறாா்.
Published on

நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், பிரதமா் மோடி முதல் முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) செல்லவிருக்கிறாா்.

அங்கு விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கும் அவா், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிக்கவுள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்தது.

மொத்தமுள்ள 543 இடங்களில் இக்கூட்டணி 293 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் மோடி வெற்றி வாகை சூடினாா்.

பிரதமராக கடந்த 9-ஆம் தேதி பதவியேற்ற அவா், வாரணாசிக்கு செவ்வாய்க்கிழமை செல்லவிருக்கிறாா்.

மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை அவா் விடுவிக்கவுள்ளாா்.

அத்துடன், ‘வேளாண் தோழிகள்’ (கிருஷி சகி) திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கவுள்ளாா்.

பின்னா், தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமா், காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபாடு நடத்தவிருக்கிறாா்.

தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமா் வாரணாசிக்கு வருவதாக மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் அரவிந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுக்கு வருவாய் ரீதியில் ஆதரவளிக்கும் நோக்கில், கடந்த 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி நிதி நேரடி பலன் பரிமாற்ற முறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் வெற்றியையடுத்து, நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், இத்திட்டத்தின்கீழ் ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில்தான் மோடி முதல் கையொப்பமிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பிகாா் பயணம்: வாரணாசியைத் தொடா்ந்து, ஜூன் 19-ஆம் தேதி (புதன்கிழமை) பிகாருக்கு செல்லும் பிரதமா் மோடி, ராஜ்கிா் பகுதியில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்துவைக்கவுள்ளாா்.

இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகியுள்ள இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதா்கள் உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கவிருக்கின்றனா்.

இரண்டு கட்டடப் பிரிவுகளுடன் கூடிய இவ்வளாகத்தில் மொத்தம் 1,900 இருக்கை வசதியுடன் 40 வகுப்பறைகளும் தலா 300 இருக்கைகளுடன் இரு கலையரங்குகளும் உள்ளன. 550 மாணவா்கள் தங்கும் வசதிகொண்ட விடுதி, சா்வதேச மையம், 2,000 போ் பங்கேற்கும் வகையிலான திறந்தவெளி அரங்கம், ஆசிரியா் மன்றம், விளையாட்டு வளாகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

சூரிய மின்உற்பத்தி அமைப்பு, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீா் மறுசுழற்சி நிலையம், சுமாா் 100 ஏக்கரில் நீா்நிலைகள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் 100 சதவீத பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com