
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனும், பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்லையா, தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார்.
மதுபான உற்பத்தி, விமான நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி நாட்டின் முன்னணி தொழிலதிபராக இருந்தவர் விஜய் மல்லையா. இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ரூ. 9000 கோடி கடன் பெற்று அதனை திருப்பித்தர இயலாமல், பிரிட்டனுக்கு தப்பியோடினார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரின் மகன் சித்தார்த் மல்லையா (37), லண்டனில் தனது காதலியான ஜாஸ்மின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வளர்ந்த சித்தார்த்துக்கும், அவரின் காதலி ஜாஸ்மினுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் இந்தியா வர திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் லண்டனில் தனது காதலியை சித்தார்த் திருமணம் செய்துகொண்டார்.
சித்தார்த் மல்லையா சேட் கிளாட் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். குழந்தைகளிடம் ஏற்படும் உணர்வு மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக சித்தார்த் மல்லையா இந்தியாவில் இருக்கும்போது தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.