
கர்நாடகத்தில் பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் கர்நாடகத்தின் ஹோலேநரசிபுரா தொகுதி எம்எல்ஏவுமான ஹெச்.டி. ரேவண்ணாவின் மூத்த மகனான சூரஜ் ரேவண்ணா(37) தான் சார்ந்துள்ள கட்சித் தொண்டரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவர் மீது பாதிக்கப்பட்ட நபர் சனிக்கிழமையன்று(ஜூன் 22) அளித்த புகாரின் அடிப்படையில், ஹாசன் பகுதியில் தங்கியிருந்த சூரஜ் ரேவண்ணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை ஹாசன் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சூரஜ் ரேவண்ணாவிடம் நள்ளிரவிலும் விசாரணை தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று(ஜூன் 23) காலை அவருக்கு ஹாசன் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கு, குற்றவியல் புலனாய்வுத் துறை(சிஐடி) விசாரணைக்கு மாற்றப்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா இன்று(ஜூன் 23) தெரிவித்துள்ளார்.
பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவருடைய தந்தை ஹெச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது தாயார் பவானி ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.