
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூரு நீதிமன்றம் இன்று (ஜூன் 24) உத்தரவிட்டது.
பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜூன் 18 முதல் ஜூலை 2ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அவர் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, பிரஜ்வல்லுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து, காவலில் எடுத்தது இன்றுடன் முடிவடைந்தது.
போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் இன்று (ஜூலை 24) ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான பிரஜ்வல்லுக்கு ஜூலை 8ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா தொடா்பான ஆபாச காணொலிகள் அடங்கிய பென் டிரைவ் வெளியானதைத் தொடர்ந்து, ஏப்ரல் 28ஆம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீட்டில் பணிபுரிந்த 47 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக இந்த வழக்கு பதியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து துப்பாக்கி முனையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 44 வயது பெண் அளித்த புகாரின் பேரில் மே 1ஆம் தேதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரஜ்வல் மீது இரண்டாவது வழக்குப் பதிவு செய்தனர்.
மே 3ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் சார்பில் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 60 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இப்புகார் பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.