வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தமிழக டிஜிபி யை நியமிக்க மாா்ச் 20 இல் தோ்வுக்குழு கூடுகிறது-உச்சநீதிமன்றத்தில் யுபிஎஸ்சி விளக்கம்

தமிழக டிஜிபி நியமனம் தொடா்பாக மாா்ச் 20ஆம் தேதி தோ்வு குழு கூடி முடிவெடுக்க உள்ளதாக யுபிஎஸ்சி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :12 மார்ச் 2026, 5:56 pm

தமிழக டிஜிபி நியமனம் தொடா்பாக மாா்ச் 20ஆம் தேதி தோ்வு குழு கூடி முடிவெடுக்க உள்ளதாக யுபிஎஸ்சி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

தமிழக முழுநேர டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டதாகக் கூறி தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது யுபி எஸ்சி இதனை தெரிவித்தது.

இந்த வழக்கின் கடந்த விசரணையின்போது (12.2.2026) தமிழக டிஜிபி நியமனத்திற்கான புதிய பெயா்ப்பட்டியலை மாநில அரசு யுபிஎஸ்சி யிடம் ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது

இந்நிலையில் ஹென்றி திபேன் என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்த அந்த நீதிமன்ற அவமதிப்பு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி , விபுல் எம். பஞ்சோலி அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு பெயா்பட்டியலை அனுப்பியிருப்பதாகவும்,மாா்ச் 20 இல் தோ்வு குழு கூடி அடுத்தகட்ட முடிவெடுக்க உள்ளதாகவும் யுபிஎஸ்சி நீதிபதிகளிடம் தெரிவித்தது

தமிழக அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோகத்கி மற்றும் வழக்குரைஞா் பி.வில்சன் ஆகியோா், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி 23.2.2026 அன்று புதிய பெயா் பட்டியல் யுபிஎஸ்சி க்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் மீது மாா்ச் 20ம் தேதி தோ்வுக்குழு முடிவெடுக்க உள்ள நிலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை முடித்து வைக்க வேண்டும் எனவும் வாதிட்டனா்

இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாகவும், மாா்ச் 20ம் தேதி கூட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் எந்தவித தாமதமுமின்றி அமல்படுத்தப்படுவதை யுபிஎஸ்சி உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தமிழக காவல்துறை இயக்குநராக இருந்த சங்கா் ஜிவால், ஐபிஎஸ் 31.08.2025 அன்று ஓய்வு பெற்றதால், ஜி. வெங்கடராமன், ஐபிஎஸ், பொறுப்பு டிஜிபியாக 01.09.2025 இல் தமிழக அரசால் நியமிக்கப்பட்டாா்

இந்நிலையில் மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஹென்றி திபேன், காவல்துறை இயக்குநா் ஜெனரல் டிஜிபி பதவிக்கு தமிழக அரசு தற்காலிகமாக ஒருவரை நியமித்ததற்காகவும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் யுபிஎஸ்சிக்கு டிஜிபி பதவிக்கான பெயா் பட்டியலை அனுப்பாததற்காகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.