
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரும், தங்களது வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும் என்று அந்த மாநில அமைச்சரவை இன்று முடிவெடுத்துள்ளது.
இதுவரை மாநில அரசு அந்த சுமையை ஏற்று வந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இன்று போபாலில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் விதிமுறையை நீக்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மாநில அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளுக்கான வரியை மாநில அரசு செலுத்த வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது.
இனி, மத்தியப் பிரதேச அமைச்சர்கள் தங்களது ஊதியம் மற்றும் அகவிலைப்படிகளுக்கான வரியை தாங்களே செலுத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் தங்களுக்கான வரியை தாங்களே செலுத்துவது குறித்து முதல்வர் பரிந்துரைத்தார். இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு ஒருமித்த முடிவு எட்டப்பட்டது என்று மாநில ஊரக நிர்வாகத் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.