
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அவர் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இரவு தகவல்கள் வெளிவந்தன.
மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கீழமை நீதிமன்றம் ஜூன் 20-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
வழக்கில் பதிவு செய்யப்பட்ட பண மோசடிப் புகாரில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிணை வழங்கியபோது, கீழமை நீதிமன்றம், அதில் சரியான கவனத்தை செலுத்தவில்லை என்று கூறி உயர் நீதிமன்றம் ஜாமீனுக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவில் அதிருப்தி அடைந்துள்ள ஆம் ஆத்மி இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கேஜரிவாலை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.
திகார் சிறையில் உள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் திங்கள்கிழமை இரவு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் செவ்வாய்க்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் கேஜரிவாலை ஆஜர்படுத்த கோரியதாகவும் அதற்கான அனுமதி தரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்ததாக தகவல்கள் பரவிய நிலையில் அதனை அதிகாரபூர்வமாக மறுத்த சிபிஐ அவரிடம் கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
அரவிந்த் கேஜரிவாலின் தரப்பில் தாக்கல் செய்யப்படும் உயர் நீதிமன்ற உத்தரவின் மீது தடை கோரும் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விசாரிக்கவுள்ளது.
அதே வேளையில் புதன்கிழமை அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்போது கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றம் சாதகமாக உத்தரவு வழங்கினாலும் தில்லி முதல்வர் சிபிஐயால் கைது செய்யப்படுவார் என்பது ஆம் ஆத்மி வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகள் எல்லாம் அவரை விடுவிக்கவிடாமல் செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் சதி என சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.