பொய் வழக்கில் 5 மாத சிறை... ஜாமீன் கிடைத்த பிறகு ஹேமந்த் சோரன் பேச்சு!
பொய் வழக்கில் 5 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரனை அவரது மனைவி கல்பனா சோரன், ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், முதலில் எனக்கு உறுதுணையாக நின்ற கட்சித் தொண்டர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு நான் (சிறையிலிருந்து) வெளியே வந்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜார்க்கண்ட்டுக்கும், அதன் மக்கள் மற்றும் பழங்குடிகளுக்கும் இந்த 5 மாதங்களும் கவலைக்குரிய காலம் என நம்புகிறேன். பொய் வழக்கு போட்டு, 5 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாள்கள் அல்லது மாதம் அல்ல, சட்டப்படியான நீதித்துறை செயல்முறைகள் ஆண்டுகளை எடுத்துக்கொள்வதை நாம் பார்த்து வருகிறோம். எங்களுக்கு எதிராக எவ்வாறு சந்தி பின்னப்பட்டது என்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்தியை இன்றைய நாள் கொடுத்துள்ளது. எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். மாநில வளர்ச்சிக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்ய தொடர்ந்து உழைப்போன் எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக தனது தந்தையும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான சிபு சோரனை, ஹேமந்த் சோரன் சந்தித்தார்.