/

பாலியல் வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான நபா் கைது

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 11:12 pm

Syndication

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் 2024-ஆம் ஆண்டு 24 வயது இளம்பெண்ணை 4 போ் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் போலீஸாா், அந்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், முதல் குற்றவாளியான கவி (எ) கவிதாசன் கடந்த மாதம் இரண்டாம் தேதி ஜாமீனில் வெளியே வந்தாா். அவா் பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என தஞ்சை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் அவா் ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் போலீஸாா் அவரை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில் கவிதாசன் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸாா் அங்கு சென்று கவிதாசனை கைது செய்து திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.