
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலையில், அவர் சிறையிலிருந்து விடுதலையானர். வெளியே வந்த ஹேமந்த் சோரன், தனது கட்சித் தொண்டர்களுக்கு தனது மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரனை அவரது மனைவி கல்பனா சோரன், ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இரண்டு தனிநபர் உத்தரவாதம், மற்றும் தலா ரூ.50 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஹேமந்த் சோரனுக்கு இன்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிர்சா முண்டா மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் இன்று மாலையே விடுதலை செய்யப்பட்டார்.
நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது.
முன்னதாக, அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பய் சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றாா். முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.