
உத்தரப் பிரதேசத்தில் தனது மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனை வழக்குரைஞர் ஒருவர் கடத்திச்சென்று கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய வழக்குரைஞரையும் அவரின் மூத்த சகோதரரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலுள்ள பித்தூர் பகுதியில் 17வயது சிறுவன் தனது தோழியான 14 வயது சிறுமியுடன் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் தந்தையும் வழக்குரைஞருமான பிரஜ் நாராயண் நிஷாத் தனது சகோதரர் தேஜ் நாராயண் நிஷாத் உடன் சேர்ந்து சிறுவனை பண்ணை வீட்டிற்கு காரில் கடத்தியுள்ளார்.
அங்கு சிறுவனின் கை, கால்களை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் சிறுவன் பலத்த காயமடைந்தார்.
மேலும், சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சிறுவனைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகே வழக்குரைஞர் சிறுவனைக் கடத்தி துன்புறுத்தியது பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.
சிறுவன் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பின்குத்பூர் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் காவல் துறையினர் சிறுவனை காயங்களுடன் மீட்டனர். அவர்கள் தாக்கியதில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால், தற்போது ஐசியூ பிரிவில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்குரைஞரையும் அவரின் சகோதரரையும் காவல் துறையினர் கைது செய்தனர். எனினும் இச்சம்பவத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் குறுக்கிட்டு காவல் நிலையத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழகுரைஞர் பிரஜ் நாராயண் மகளை கட்டாயப்படுத்தி தேநீர் கடையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுவன் மீது அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களின் அழுத்தத்தால், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பித்தூர் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.