
உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் கும்பலால் கொல்லப்பட்ட இஸ்லாமியர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாரில் உள்ள ஜவுளி வியாபாரி முகேஷ் சந்திர மிட்டல் என்பவரின் வீட்டில் முகமது ஃபரித் (35), அவருடைய சகோதரர் ஸகி மற்றும் அவருடைய ஆட்கள் கொள்ளையடிக்க வந்ததாக முகேஷின் மனைவி புகாரளித்துள்ளார். திருட்டின் போது ஃபரீத் தன்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் ரூ.2.5 லட்சத்தைத் திருடிச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சம்பவத்தின்போது ஃபரீத் அங்கிருந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருட வந்ததாகக் கூறப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 395 (கொள்ளை), 354 (பெண்கள் மீது தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கொல்லப்பட்ட நபரான ஃபரீத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், திருட்டு நடந்ததாகக் கூறப்பட்ட பத்து நாள்களுக்குப் பிறகே அனைவரின்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 18 அன்று, திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு ஃபரீத் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அடுத்த நாளே கொலை செய்ததாகக் கூறி 6 நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் முகேஷின் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த ஃபரீத்தை கும்பல் ஒன்று சந்தேகப்பட்டுத் தாக்கியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஃபரித்தின் சகோதரர் ஸகி கூறுகையில், “ஃபரீத் முஸ்லிம் என்று தெரிந்த பின்பு தான் அவர்கள் அவனைத் தாக்கினர். தற்போது, இறந்துபோன என் சகோதரன் மீது அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரிகளின் அழுத்தம் காரணமாகவே வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.