
எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்களின் பெயருக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்று சேர்த்துள்ளனர்.
பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “ நரேந்திர மோடிக்கு குடும்பமே இல்லை, நீங்கள் ஹிந்துகூட இல்லை, ஹிந்து மதத்தினரின் தாய் இறந்தால், மொட்டை அடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் மொட்டை அடித்தீர்களா? சமூகத்தில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறீர்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜோதித்ராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் ‘மோடி கா பரிவார்’(மோடியின் குடும்பம்) என்று தங்களின் எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் சேர்த்துள்ளனர்.
மேலும், லாலு பிரசாத்தின் விமர்சனத்துக்கு தெலங்கானா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:
“இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள், ஊழல், குடும்ப அரசியல் உள்ளிட்டவற்றில் மூழ்கியுள்ளனர். குடும்ப அரசியல் குறித்து நான் கேள்வி கேட்கும் போதெல்லாம், மோடிக்கு குடும்பம் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் இன்று மோடி குடும்பத்தில் உள்ளனர். நாட்டின் ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பம். குடும்பமற்றவர்களுக்கு மோடி சொந்தம். மோடிக்கு அவர்கள் சொந்தம்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.