”நாங்கள் மோடியின் குடும்பம்” என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளை வாரணாசியிலுள்ள மக்கள் தங்கள் வீட்டு வாயிலின் முன்பு மக்கள் தொங்கவிட்டுள்ளனர்.
’பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை’ என்ற விமர்சனத்தை சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன் வைத்தார் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீதான விமர்சனத்துக்கு பதிலடியாக, பாஜக தலைவர்கள் தொடங்கி அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் என பலரும் தங்கள் சமூக வலைதள சுயவிவரக்குறிப்பில் தங்கள் பெயர்களுக்கு பின் ‘மோடியின் குடும்பம்’ என்ற அடைமொழியை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக அவரது தொகுதியான, உத்தரப் பிரதேசத்திலுள்ள வாரணாசியை சேர்ந்த மக்கள் கைகோர்த்துள்ளனர்.
தங்கள் வீட்டு வாயிற்சுவரில் ”நாங்கள் மோடியின் குடும்பம்” என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளை வைக்கத் தொடங்கியுள்ளனர் வாரணாசிவாசிகள். இது தொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.