சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது, வரலாற்றிலும், தற்காலத்திலும் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை கௌரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
பாலின சமத்துவத்தை நோக்கிய பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பாலின சமத்துவம் மற்றும் பல்வேறு துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு கவனம் செலுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டியதை வலியுறுத்தும் நாளாகவும் அமைகிறது. சம ஊதியம், கல்வி பெறுவது, தலைமை வாய்ப்பில் தற்போதும் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதன் காரணங்கள் கண்டறியப்பட்டு, அந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள்.
பெண்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்தெறிந்த, முன்னேறிய பெண்களைப் பற்றியும், பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தும் நாளாக இருக்கிறது.
2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள், 'பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்,' என்பதாகும். இதன் மூலம், பொருளாதாரத்தை வலுவாக்குவதை இலக்காகக் கொண்டு கவனம் செலுத்தப்படும். தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு கருப்பொருள் 'திறமையை ஊக்குவிப்பது.'
எப்போது தொடங்கியது மகளிர் தினம்
1975ஆம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. எனினும், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1911ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
1908ஆம் ஆண்டு நல்ல ஊதியம், வேலை நேரக் குறைப்பு, வாக்களிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஆடை உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்கள் நியூ யார்க் நகரின் சாலைகளில் பேரணி நடத்தினர். இந்த இயக்கமே பிற்காலத்தில் சோஷலிஸ்ட் கட்சியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 8 - உழைக்கும் மகளிர் நாள்