தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் யாரும் கலவரத்திலோ அல்லது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களிலோ ஈடுபட வேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பேசிய அவர், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். மக்களுக்கு தொல்லை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். எதிர்க்கட்சிகள் தூண்டினாலும் கலவரத்திலோ அல்லது அதுபோன்ற செயல்களிலோ தொண்டர்கள் ஈடுபட வேண்டாம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நான் வெறுக்கிறேன். அதில் 5 மதங்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களின் பங்களிப்பை இந்தச் சட்டம் அங்கீகரிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, முதல்வர் மம்தா பானர்ஜி பயத்தின் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார். மம்தா பானர்ஜியை மக்கள் நம்பமாட்டார்கள். மம்தா யார் என்பதை மக்கள் அறிவார்கள். இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பரிதாபமான நிலையை அடையப்போகிறது என விமர்சித்தார்.