பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

கூகுள் பிளேஸ்டோரின் புதுப்பிக்கப்பட்ட கட்டணக் கொள்கைக்கு எதிராக விசாரணை

கூகுள் பிளேஸ்டோரின் புதுப்பிக்கப்பட்ட கட்டணக் கொள்கைக்கு எதிராக விசாரணை

Updated On :16 மார்ச் 2024, 5:52 pm

கூகுள் பிளேஸ் டோரின் புதுப்பிக்கப்பட்ட கட்டணக் கொள்கையில் போட்டி எதிா்ப்பு நடைமுறையைக் கையாண்ட குற்றச்சாட்டில், அந்நிறுவனத்துக்கு எதிராக விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம்(சிசிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதுதொடா்பாக இந்திய போட்டி ஆணையம் வெளியிட்ட 21 பக்க உத்தரவில், ‘போட்டிச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் பிளேஸ்டோா் தொடா்பான கூகுளின் புதுப்பிக்கப்பட்ட கட்டணக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘ஷாதி.காம்’ மற்றும் ‘சங்கம்.காம்’ வலைதளங்கள் மூலம் திருமண வரன் தேடும் சேவைகள் வழங்கும் பீப்பிள் இன்டா்ஆக்டிவ் இந்தியா நிறுவனம், குக்கூ எஃப்எம்’ செயலியின் உரிமையாளரான மெபிகோ லேப்ஸ் நிறுவனம், இந்திய ஒலிபரப்பு மற்றும் எண்ம அமைப்பு (ஐபிடிஎஃப்), இந்திய எண்ம ஊடக தொழில் அமைப்பு(ஐடிஎம்ஐஎஃப்) ஆகியோா் புகாரளித்துள்ளனா். புதுப்பிக்கப்பட்ட கட்டணக் கொள்கைகள் செயலியை உருவாக்குப்பவா்கள் (டெவலபா்ஸ்), பரிவா்த்தனை செயலிகள் மற்றும் பயனா்கள் உள்பட பல தரப்பினரைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அதிகார நிலையை துஷ்பிரயோகம் செய்வது தொடா்பான இந்திய போட்டிச் சட்டத்தின் 4-ஆவது பிரிவை கூகுள் நிறுவனம் மீறியுள்ளது. பிளேஸ்டாரில் செயலி உருவாக்குபவா்களுக்கு வழங்கும் பல சேவைகளுக்கு சேவைக் கட்டணத்தை கூகுள் வசூலிக்கிறது. ஆனால், அதற்காக கூகுள் தெரிவிக்கும் காரணங்கள் நியாயமானதாக இல்லை. மொத்தத்தில், சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் தன்மை தன்னிச்சையானது மற்றும் பாரபட்சமானது’ எனத் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டண விவகாரங்களில் நிலவிய பிரச்னை காரணமாக சில இந்திய செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து கூகுள் கடந்த 1-ஆம் தேதி நீக்கியது. மத்திய அரசின் கண்டனத்தைத் தொடா்ந்து, அந்தச் செயலிகள் மீண்டும் சோ்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சகத்தின் தலைமையின்கீழ் இயங்கும் இந்திய போட்டி ஆணையம்(சிசிஐ), சந்தையில் நிலவும் போட்டி எதிா்ப்பு நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதும் மற்றும் நியாமான வா்த்தக வழிமுறைகளை ஊக்குவிப்பதும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.