ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு விழா மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்திலிருந்து திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது,
பாஜகவை வீழ்த்துவதே நமது ஒரே இலக்கு. பாஜகவை விட பெரிய அச்சுறுத்தல் இந்தியாவுக்கு இல்லை. மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.
பிரதமரின் பொய்யான பிரசாரங்களை இந்தியா கூட்டணி முறியடிக்கும். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் செய்துவந்தது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று வெளிநாட்டு பயணம். இரண்டாவது பொய்யான பிரசாரம்.
இந்தியா கூட்டணி ஊழல் மிகுந்தது என்கிறது பாஜக. ஆனால், தேர்தல் பத்திர நன்கொடை மூலம் மிகப்பெரிய ஊழலை அரங்கேற்றியது பாஜக. அக்கட்சின் முகமாக உள்ள நரேந்திர மோடி ஊழலைப் பற்றி பேசுகிறார்.
பாஜகவால் சீரழிக்கப்பட்ட மாநிலங்களில் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்திய கலாசாரத்தையும் மக்களையும் அவர்களின் பிரச்னைகளையும் உள்வாங்கும் பயணம் அது.
பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்துவதிலேயே ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் வெற்றி உள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை நீதி நடைப்பயணம், தில்லியைக் கைப்பற்றுவதில் நிறைவு பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.